லண்டனில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு தினத்தில் கலந்து
கொண்டவர்கள் “தமிழினப்படுகொலையை , உலக மனச்சாட்சியை உலுப்பும்
திறவுகோலாக மாற்றுவோம்” என்று உறுதியெடுத்துக் கொண்டனர் .
நீண்ட சவால்களையும், அச்சுறுத்தல்களையும் மீறி கொட்டும் மழைக்கும், குளிருக்கும்
மத்தியில் பிரித்தானிய தமிழர் பேரவையினரின் ஏற்பாட்டில் லண்டன் மாநகரில் மாலை 5
மணிக்கு Hyde Park இல் ஆண், பெண், இளையோர், முதியோர், குழந்தைகள் பெருமளவில்
மக்கள் திரண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவெழுச்சி தினம்
உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
அகவணக்கத்தைத் தொடர்ந்து இறுதிவரை முள்ளிவாய்க்கால் கொடுமைகளிலிருந்து மீண்ட
வாழும் சாட்சியமாய் இந்த நாட்டிற்கு புலம்பெயோர்ந்தோரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு
தமிழினப்படுகொலையில் கொல்லப்பட்ட எம் உறவுகளுக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
இனவாத சிறிலங்கா அரசினால் 1956ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரை கொடூரமாக
தமிழ்மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் “CONTINUING
GENOCIDE WITH IMPUNITY” எனும் தலைப்பில் தமிழர் தாயகத்தின் மாவட்டரீதியாக
இடம், ஆண்டு, திகதி என வகைப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.
முன்னாள் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிப்
பாராளுமன்ற தலைவருமான ஜேம்ஸ் பெரி (James Berry), முன்னாள் பிரித்தானிய
பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உப தலைவர்
வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting), முன்னாள் பிரித்தானிய பாராளுமன்ற
உறுப்பினர்கள் லீ ஸ்கொட் (Lee Scott), ஹன்னா டேவிட் (Hannah David), மக்ஸ்வல்
ஸ்கொட்(MJ Maxwell Scott) மற்றும் மேலும் பலர் உரை நிகழ்த்தினர்.
மேலும் லேபர் கட்சி தலைவர் ஜெரமி கோபன் (Jeremy Corbyn), முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர்கள் பால் ஸ்கல்லி (Paul Scully), ஜோன் ரயன் (Joan Ryan), பொப் ப்ளாக்மன்
(Bob Blackman), கரத் தோமஸ் (Gareth Thomas) ஆகியோரால் வழங்கப்பட்ட
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் செய்திகளும் பகிரப்பட்டது.
தமிழகத்திலிருந்து வருகை தந்த முள்ளிவாய்க்கால் உணர்வின் வலிகளை ஓவியமாக தந்த
ஓவியர் திரு. புகழேந்தி அவர்களால் காலத்தின் தேவை கருதி தமிழர்கள் நாம் கருத்து
வேற்றுமைகளை களைந்து எமக்குள் ஒற்றுமையாக இணைந்து பொது எதிரியான சிங்களத்தினை
வென்றெடுக்க வேண்டும் என்று கூறினார்.
நல்லாட்சி அரசு என்று கூறிக் கொள்ளும் தற்போதைய அரசிலும் தொடரும் இனப்படுகொலைகளை
நிறுத்து (“STOP
ONGOING GENOCIDE OF TAMILS”) என்னும் தொனிப்பொருளில்
1, STOP
CULTURAL GENOCIDE (கலாச்சார அழிப்பினை
நிறுத்து)
2, IMPUNITY TO
COMMIT GENOCIDE (இன அழிப்பினை மேற்கொள்வோரை பாதுகாக்காதே)
3, OCCUPYING
PEOPLE'S LAND (மக்களின் நிலத்திலிருந்து வெளியேறு)
4, DESTROYING
TAMIL PEOPLES IDENTITY (தமிழ் மக்களின் இனத்துவ அடையாளங்களை அழிக்காதே)
என நான்கு வகைப்படுத்தப்பட்டு முன்னாள் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம்
அதனை வழிமொழியும் விதமாக கையெழுத்து பெறப்பட்டது.
அனைத்து சமூகத்தினருக்கும் ஏற்றவாறு தமிழ், ஆங்கிலம் கலந்து உணர்வின்
வெளிப்பாடுகளை பிரதிபலித்து படைக்கப்பட்ட நாட்டிய நடனத்துடன், முள்ளிவாய்க்கால்
வலி சுமந்த கவிதை நெஞ்சை உருக்கும் விதமாக அமையப்பெற்றது.
ஓரிடத்தில் கூடி அழுது அஞ்சலி செலுத்தி மனக்கவலைகளை ஆற்றுவதோடு மட்டும் நில்லாமல்
நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற இனப்படுகொலைகளுக்கான நீதி கோரும் போராட்டத்திற்கு
வலுச்சேர்க்கும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை பிரித்தானிய தமிழர் பேரவை ஒவ்வொரு
ஆண்டும் செய்து வருகின்றது.
கடந்த ஆண்டு சிறிலங்கா படைகளினால் சரணடைந்த, வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான, “அவர்கள் உயிரோடு உள்ளார்களா?" (ARE THEY ALIVE?) என்ற
தொனிப்பொருளை முன்னிறுத்தி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை
ஆர்வலர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக, பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் திரு.
ரவிக்குமார் அவர்களின் உரையில்
“ஆவணப்படுத்தல் மூலம் உண்மைகளை வெளிக் கொண்டு வருவதில் நாம் முன்னெடுத்த அயராத
முயற்சிகளும் சர்வதேச சக்திகளுடனான தொடர்ச்சியான சந்திப்புகள் மூலம் தான் ஒத்துக்
கொண்டுள்ள விடயங்களை சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் செய்யப் போவதில்லை என்று
நிரூபித்தமையும் அண்மை காலத்தில் பல நாடுகளை மீண்டும் எம் கோரிக்கைகளின் பக்கம்
திருப்பியுள்ளது.
ஐ.நா தீர்மானத்திலுள்ள முக்கியமான அம்சங்கள் எதனையும் சிறிலங்கா செய்யாது மீண்டும்
இழுத்தடிக்கப் போவதனை உன்னிப்பாகக் கண்காணித்து அம்பலப்படுத்துவது பாதிக்கப்பட்ட
தமிழ் மக்களின் கடமையும் முன்னுரிமையும் ஆகும். முன்னரைப் போல் அல்லாது
வரையறுக்கப்பட்ட கால அட்டவணையின் அடிப்படையில் சிறிலங்கா அரசு அமுலாக்க வேண்டும்
என்பதனை நாம் அனைவரும் இணைந்து வலியுறுத்த வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
தாயக விடுதலைக்காகவும், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட படுகொலைகளுக்கும்,
அநீதிகளுக்கும் பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ச்சியாக குரல் கொடுக்கும்,
சர்வதேச நாடுகளை எம் பக்கம் திருப்பி நீதியை பெறுவதற்கு அயராது செயற்படும்.
https://youtu.be/ihde9s9aOtc