மிகப் பெரிய தமிழின படுகொலையின் சாட்சியாகிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இனப்படுகொலைக்கு உள்ளாக்கியவர்களே இரவோடு இரவாக இடித்து அகற்றியது பாசிச ஆட்சியின் வெளிப்பாடாக உள்ளது என தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று (13.05.2021) விடுத்துள்ள ஊடாக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழர்களின் கல்லறை நினைவுகள் கூட இந்த மண்ணிலே இருக்கக் கூடாது என்பதில் சிங்கள தேசம் பெரும் முனைப்புக் கொள்கிறது என்பது சோதனையே.
அழுவதற்கு கூட அழித்தவனிடம் அனுமதி கோரும் துர்ப்பாக்கிய நிலையில் தமிழர்களின் வாழ்வியல் காணப்படுவதே மிகுந்த துர்ப்பாக்கியம்.
இன அழிப்பு யுத்தம் முடிவுற்று 12 ஆண்டுகள் கடந்து விட்ட போதும் தமிழர்களை கனவில் கூட எதிரியாக நோக்கும் மனோ நிலையில் இருந்து சிங்கள தேசம் விடுபடவில்லை.
இன்னும் இராணுவ அடக்கு முறையும் அதன் மேட்டிமைவாத கட்டமைப்புக்களும் தமிழ் மக்களுக்கு தொடர் அச்சுறுத்தலாகவே காணப்படுகிறது.
தமிழ் மக்களின் வாழ்வில் இருப்புக்கான சமூக நீதிக்கான கோட்பாடு என்பது அடக்கு முறையின் அடையாளமாகவே மேலிடையிடுகின்றது.
இந்த நோக்கில் இருந்து விடுபடாத வரை நல்லிணக்கம் சகவாழ்வு இனத்துவ ஐக்கியம் என்பதோ கிஞ்சித்தும் சாத்தியப்படப்போவது இல்லை.
கடந்த 12 ஆண்டுகளாக நீதி கோரி உலகின் சகல வாயில்களையும் தட்டிய எம்மினம் உறவுகளுக்காக பொது வெளியில் ஓலமிட்டு அழ முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குட்பட்டது என்பது உலகில் எந்த இனத்திற்கும் ஏற்படக்கூடாத பெரும் சாபமே.
இன விடுதலைக்காக வீறு கொண்டு போராடிய இனம் உறவுகளின் நினைவுக் கல்லறைக்காக போராட வேண்டிய கொடுமைக்குள் உள்ளாக்கப்பட்டுள்ளது என்பது சகிக்க முடியாத பெரும் துன்பமே.
இனப்படுகொலை நினைவுகளை தமிழ் மக்களின் மனங்களில் இருந்து அகற்றி விடலாம் என்று அரசு படாத பாடு படுகிறது. அதற்கு கொரோனாவும் துணை நிற்கிறது. ஆனால் தமிழ் மக்களின் மனங்களில் இருந்து இனப்படுகொலை மறந்து விடமாட்டோம்.
1 இலட்சத்து 46 ஆயிரத்து 679 பேருக்கான பதிலை அரசு என்றொ ஒரு நாள் பதில் கூறியே ஆக வேண்டும்.
அது வரை நீதிகோரிய எமது நெடும் பயணம் தொடரவே வேண்டும். றணங்களும் , வலிகளும் , ஏமாற்றங்களும் எமக்கு புதியவை அல்ல.
அதை கண்டு நாம் அச்சப்பட கோளைகளும் அல்ல என்பதை சிங்கள தேசம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
மனிதாபிமானத்தை கூட விலை பேசும் கொடுங்கோல் ஆட்சியாளர்களிடம் இதை விட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.?
ஆகவே தடைகளை மீறி இன அழிப்புக்குள்ளான எம் உறவுகளுக்காக மே 18 இல் உணர்வு பூர்வமாக அஞ்சலிப்போம்.என என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.