
2019 ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி சீனா நாட்டில் முதன் முதலாகப் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் இன்று உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு விரைவாகப் பரவியுள்ளது. சீன நாட்டில் இருந்து விமானப் பயணம் மேற்கொண்டவர்கள் இந்தத் தொற்று நோயைத் தங்களுடன் கொண்டு சென்றார்கள். பல்வேறு சமூகங்களிடையே பரவிய இந்த நோய் புலம் பெயர்ந்த தமிழர்களையும் பழி வாங்கியிருக்கின்றது. இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் மட்டுமல்ல, புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அழையா விருந்தாளியான இந்தக் கொரோனா வைரஸ்ஸால் இதுவரை சுமார் 30 மேற்பட்ட தமிழர்கள் புலம்பெயர்ந்த மண்ணில் மரணத்தை சந்தித்திருக்கிறார்கள்.

இந்த வைரஸ் தொற்றால் ஏனைய நாடுகளைப் போல, பொருளாதார வீழ்ச்சியையும் எதிர் கொள்ள வேண்டிய நிலையில் கனடா இருக்கின்றது. இதன் காரணமாக கனடாவின் பொருளாதார வீழ்ச்சி இவ்வருடம் 6.2 வீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நிலைமை வழமைக்குத் திரும்பும் பட்சத்தில், 4.2 வீத வளர்ச்சியை அடுத்த வருடம் 2021 இல் எதிர்பார்க்கிறார்கள். பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா, சீனா, யப்பான் ஆகியன முதல் மூன்று இடத்தையும் வகிப்பது குறிப்பிடத் தக்கது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி கனடிய எல்லையை விரைவில் திறக்கப் போவதாக அறிவித்திருப்பது கனடியர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. அமெரிக்கா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி எல்லையைத் திறக்குமேயானால், எல்லையில் அதிகம் பாதிப்புக்கு உள்ளான நியூயோர்க் இருப்பதால், அவர்களின் வருகையால் ஒன்ராறியோவில் உள்ள கனடியர்கள்தான் அதிகம் பாதிப்படைவார்கள்.
இறால் போட்டு சுறா பிடிப்பதாகத் தமிழில் ஒரு பழமெழி இருக்கின்றது. அதுதான் இப்போது நடைபெறுகின்றது. பொருளாதார ரீதியாக முன்னேறும் நாடுகளைக் குறிவைத்து, அந்த நாடுகளை உடைத்தெறிய, நல்லதொரு முறையாக அமைந்திருக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக உலகின் எல்லாக் கதவுகளும் மூடப்பட்டுக் கிடக்கின்றன. செல்வந்த நாடுகளே என்ன செய்வது என்று தெரியாமல், இதனால் ஏற்பட்ட உள்ளாட்டுப் பிரச்சனைகளையும் எதிர் கொள்ள முடியாமல் தவிக்கின்றன. இதற்கு முதற் காரணம் யார் என்று எல்லோருக்கும் புரியும். யுத்தம் என்றோ, குண்டுகள் போட்டோ அழிவுகளை மேற்கொள்ளாமல், வன்முறையைப் பாவிக்காமல், யார் செய்தார்கள் என்பது கூடத் தெரியாமல் செய்துவிட்டு மௌனமாக இருந்தாலே போதுமானது. பேரழிவுகள் தானாகவே நடந்துவிடும். இனிவரும் காலங்களில் வைரஸ் யுத்தங்கள் தான் நடக்கப் போகின்றன. புதிய வைரஸ{க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முன்பே தேவைப்பட்ட அழிவுகளை வைரஸ் மூலம் நடத்திவிட முடியும். தற்கொலைக் குண்டுகளைப் பாவிப்பதைவிட இதன் மூலம் ஒருவருக்கும் தெரியாமலே தேவையான இடத்தில், தேவையான நேரத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடமுடியும்.

ஒன்ராறியோ அரசின் ஆதரவில் நடக்கும் 626 நீண்டகால பராமரிப்பு நிலையங்கள் ஒன்ராறியோவில் இருக்கின்றன. கொரொனா வைரஸின் தாக்கத்தால் இங்குள்ள 933 பேர் இதுவரை பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையங்களில் இதுவரை 162 பேர் இறந்திருக்கிறார்கள். அங்கு வேலை செய்த உதவியாளர்களில் 530 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 114 நிலையங்களில் இந்த நோய் பரவி இருக்கின்றது. இதில் மூன்று நிலையங்களில் ஒவ்வொன்றிலும் 20 மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள். ஏற்கனவே ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இவர்களுக்கு, குறிப்பாக முதியோருக்கு நோய் எதிர்புச் சக்தி குறைவாக இருப்பதே அதிக மரணங்களுக்குக் காரணமாகும் என்று சொல்லப்பட்டாலும், முதியோரைப் பாதுகாப்பதில் உள்ள அரசின் குறைபாடுகளும் சுட்டிக் காட்டப்பட்டது. ஒன்ராறியோ மருத்துவ மனைகளில் ஏற்கனவே மேலதிக 2000 படுக்கைகள் போடப் பட்டிருக்கின்றன. இம்மாதமுடிவில் மேலதிகமாக 4200 படுக்கைகள் போடப்பட இருக்கின்றன.
சுயதனிமைப்படுதலால் ரொறன்ரோவில் தனிமையில் வாழும் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 500 மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட சொப்பகா (SOPCA) என்று சொல்லப்படுகின்ற பீல்பிரதேச குடும்பமன்றத்தைச் சேர்ந்த இளம்தலைமுறையினர், போதிய பாதுகாப்பு வசதிகளோடு மிஸஸாகா, பிராம்டன் பகுதியில் உள்ள முதிய அங்கத்தவர்களுக்கான சேவையில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்கள். வெளியே செல்ல முடியாமல் தொடர் மாடிவீடுகளில் சுயதனிமைபடுத்தலில் இருக்கும் அவர்களுக்குத் தேவையான மருந்து வகைகளை மருந்தகத்தில் இருந்து பெற்றுக் கொடுப்பதிலும், பால், பாண் போன்ற முக்கிய உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுத்தும் உதவி செய்கின்றார்கள். துணிவோடு முன்வந்து முதியோருக்குத் தேவையான இத்தகைய உதவிகளைச் செய்யும் எமது முன்மாதிரியான இளைய தலைமுறையினருக்கு இச்சந்தர்ப்பத்தில் கனடா தமிழினத்தின் சார்பாக எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.